
புதுடில்லி: சனாதனம் தொடர்பாகப் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்த வழக்கில், உதயநிதி நேரில் ஆஜராகச் சுப்ரீம் கோர்ட் விலக்கு அளித்துள்ளது. வழக்கைத் தமிழகத்திற்கு மாற்றக் கோர்ட் மறுத்துவிட்டது.
சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போல் ஒழிக்க வேண்டும் என்று பேசினார். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
விலக்கு
இதனிடையே, உதயநிதி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‛‛அனைத்து மாநிலங்களிலும் தொடுக்கப்பட்ட வழக்குகளைத் தொகுத்து ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை இன்று(ஆகஸ்ட் 14) விசாரித்த நீதிபதிகள்,
”உதயநிதி நேரில் ஆஜராகச் சுப்ரீம் கோர்ட் விலக்கு அளித்தனர். வழக்கைத் தமிழகத்திற்கு மாற்ற முடியாது” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இந்த வழக்கில் எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


