
எட்டு மாதத்தில் எட்டுப் போர்களை நிறுத்திப் பல கோடி மக்களின் உயிர்களைக் காத்துள்ளதாகவும், தனக்கு அடுத்த ஆண்டாவது அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் யூடியூபில் வெளியிட்டுள்ள காணொலியில், எந்தவொரு நாட்டின் அதிபரும் ஒரு போரை நிறுத்தியதாகத் தனக்குத் தெரியவில்லை என்றும், எட்டு மாதங்களில் எட்டுப் போர்களைத் தான் நிறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்தச் சாதனைக்காகத் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கக் கூடாதா? என்றும் டிரம்ப் வினவியுள்ளார். ஒருவேளை தனக்கு அடுத்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
போர்களை நிறுத்தியதால் பல கோடி மக்களின் உயிர்களைத் தான் காத்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் இடையான போர் மிகவும் கடுமையாகச் சென்றுகொண்டிருந்த நிலையில், எட்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், போரை நிறுத்தும் வரை வணிக உடன்பாடு செய்துகொள்ள முடியாது என்று கூறியதால் இரு நாடுகளும் போரை நிறுத்தியதாக டிரம்ப் தெரிவித்தார்.
போர்களை நிறுத்துவதைத் தான் பெரிதும் விரும்புவதாகவும் டிரம்ப் கூறினார்.



