
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கனமழை பெய்துவருவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் பெய்து வரும் தொடர் கனமழையால் தாமிரபரணி மற்றும் இணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் அதி கனமழை காரணமாக, தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர் ஆற்றோரம் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் கிடைக்கும் பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
மேலும் கூடங்குளம் அருகே அணு விஜய் குடியிருப்புக்கு எதிரே உள்ள பிருந்தாவன் நகருக்குள் தண்ணீர் புகுந்தது. இதன் காரணமாக வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டு சேதமடைந்தன. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களக்காட்டில் இருந்து சிதம்பராபுரம் செல்லும் தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கூடங்குளத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கனமழையின் காரணமாக திருநெல்வேலி- திருச்செந்தூர் இடையேயான சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லை செல்கிறார். வெள்ளம் பாதித்த இடங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.



