
தமிழ்நாட்டில் தவெக அரசின் அமைச்சரவையில் இன்று புதிதாக 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்ட நிலையில், அவர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே உள்ள அமைச்சர்களின் சில துறைகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி முதலமைச்சர் ஜோசப் விஜயிடம் பொதுத்துறை, பொதுநிர்வாகம், குடிமைப் பணி அதிகாரிகள், உள்துறை, காவல், திட்டச் செயலாக்கம், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறைகள் உள்ளன.
அமைச்சர் ஆனந்திடம் ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறைகள் உள்ளன.
அமைச்சர் நிர்மல்குமாரிடம் மின்துறை, சட்டத்துறை ஆகியன உள்ளன.
அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஏற்கெனவே இருந்த நிதித்துறை மாற்றப்பட்டுள்ளது. அவருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்களில் தூத்துக்குடி ஸ்ரீநாத்துக்கு மீன்வளம், மீனவர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கமலிக்குக் கால்நடைப் பராமரிப்புத்துறையும், அமைச்சர் விஜயலட்சுமிக்குப் பால்வளத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் ரஞ்சித்குமாருக்கு வனத்துறையும், அமைச்சர் வினோத்துக்கு வேளாண்மை, உழவர் நலத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் ராஜீவுக்குச் சுற்றுச்சூழல் துறையும், அமைச்சர் ராஜ்குமாருக்கு வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் காந்திராஜுக்குக் கூட்டுறவுத்துறையும், அமைச்சர் மதன்ராஜாவுக்குச் சிறு குறு நடுத்தரத் தொழில்நிறுவனங்கள் துறையும் ஒதுக்கப்பட்டள்ளது.
இராஜபாளையம் தொகுதியைச் சேர்ந்த அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சமூகநலத்துறை, மகளிர் அதிகாரமளித்தல் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான அமைச்சர் ராஜேஸ்குமாருக்குச் சுற்றுலாத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் விஜய் பாலாஜிக்குக் கைத்தறித்துறையும், அமைச்சர்லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு வணிக வரி, பத்திரப்பதிவுத் துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனுக்குப் போக்குவரத்துத் துறையும், அமைச்சர் ரமேசுக்கு இந்து அறநிலையத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலூரைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதனுக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் குமாருக்குத் தகவல் தொழில்நுட்பத்துறையும், அமைச்சர் தென்னரசுக்கு அயலகத் தமிழர் நலத்துறையும், அமைச்சர் சம்பத்குமாருக்குப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் முகமது பர்வசுக்குத் தொழிலாளர் நலன் திறன்மேம்பாட்டுத் துறையும், அமைச்சர் சரத்குமாருக்கு மனிதவள மேலாண்மைத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் மரிய வில்சனுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் விக்னேசுக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒதுக்கப்படாத துறைகளாகச் சிறுபான்மையினர் நலன், ஆதிதிராவிடர் நலத்துறை ஆகியன உள்ளது குறிப்பிடத் தக்கது.



