Advertisements

அமைச்சரவையில் அதிமுகவைச் சேர்த்தால், தவெகவிற்கான ஆதரவை மறுபரிசீலனை செய்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மீண்டும் ஒரு தேர்தலை மக்கள் சந்திக்கக் கூடாது, ஆளுநர் ஆட்சி வந்து விடக் கூடாது என்பதற்காகவே தவெகவிற்கு நாங்கள் ஆதரவளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
மக்களின் தீர்ப்பு என்பது திமுக, அதிமுக என இரு கட்சிகளுக்கு எதிராகத்தான் இருந்தது. அதேசமயம் பெரும்பான்மையை யாரும் பெறவில்லை. இதில் தவெகவிற்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பிருந்ததால், இடதுசாரிகள் மற்றும் விசிக ஆதரவளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஆனால், அவர்கள் அதிமுகவை ஆட்சியில் சேர்த்துக்கொள்வதோ, அமைச்சரவையில் இடம் தருவதோ மக்கள் தீர்ப்புக்கு எதிரானது என்று கூறினார். எனவே, அதிமுகவின் ஆதரவைத் தவெக பெற்றால், தங்கள் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம் என்று தெரிவித்தார்.
Advertisements


