
தொடர் மழையின் காரணமாக கிழக்கு கடற்கரை சாலை தொண்டி பஜார் பகுதியில் உள்ள வேப்ப மரம் வேரோடு சாலையில் சாய்ந்தது. நல்வாய்ப்பாக வாகன ஓட்டிகள் உயிர் தப்பினர்.
சென்னை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.
அதன்படி 4 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.மேலும் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருகிறது.

இந்த நிலையில் இரவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக கிழக்கு கடற்கரை சாலை தொண்டி பஜார் பகுதியில் உள்ள வேப்ப மரம் நள்ளிரவு வேரோடு சாலையில் சாய்ந்தது. இரவிலும் போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில் உள்ள மரம் சாய்ந்தபோது வாகன ஒட்டிகள் விபத்தில் சிக்காமல் உயிர் தப்பினர்.
மேலும் தனியாருக்கு சொந்தமான இணையதள இணைப்புகள் அறுந்து கம்பங்கள் சேதமானது. தகவல் அறிந்து வந்த திருவாடானை நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அறுவை இயந்திரத்தை கொண்டு மரத்தை அறுத்து சாலையில் இருந்து அகற்றினர்.


