பெரிய வெள்ளி நாள் இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நமக்கு நினைவூட்டுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்
இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூரும் வகையில் இன்று உலகம் முழுவதும் பெரிய வெள்ளி கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ்தளப் பக்கத்தில் விடுத்துள்ள செய்தியில், இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நமக்கு நினைவூட்டும் நாளாகப் பெரிய வெள்ளி அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நன்னாளில் மக்களிடையே நல்லிணக்கமும், அன்பும், மன்னிக்கும் குணமும் மேலோங்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.
சகோதரத்துவமும் நம்பிக்கையும் நம் அனைவரையும் வழிநடத்தட்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.பெரிய வெள்ளியையொட்டி இயேசுவின் தியாகத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நினைவுகூர்ந்துள்ளனர்.
பெரிய வெள்ளியையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள செய்தியில், உலக மக்கள் அனைவரையும் இரட்சிக்கும் இயேசு பிரான், அனைத்து மனிதர்களின் பாவங்களையும், துயரங்களையும் தூக்கிச் சுமந்து சிலுவை மரத்தில் அருள் மலராய்ப் பூத்த, தியாகத் திருநாளில் அவரின் தியாகங்களையும், துணிவையும் நினைவு கூர்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை விடுத்துள்ள செய்தியில் மனிதகுல நலனுக்காகத் தன்னையே சிலுவையில் அர்ப்பணித்தவர் இயேசு பெருமான் என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்பு, தியாகம், கருணை, மன்னிப்பு போன்ற உயர்ந்த பண்புகளை, நம் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவோம் என்றும், அனைவரின் வாழ்விலும், அமைதியும், நலனும், சமாதானமும் நிலவட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

