
வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு வாரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இன்று கனமழை பெய்யக் கூடும் எனவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் 40 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.சென்னையை பொறுத்தமட்டில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


