
இந்தியா – வங்கதேசம் இடையே எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுப்பது, ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து இருநாட்டு எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைவர்கள் விரிவான பேச்சு நடத்தியுள்ளனர்.
இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை, வங்கதேச எல்லைக் காவல்படை ஆகியவற்றின் தலைமை இயக்குநர் நிலையிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜூன் ஒன்று முதல் எட்டாம் நாள் வரை நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல், கள்ளநோட்டுப் புழக்கம், ஆட்கடத்தல் ஆகிய எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
எல்லையில் சட்டவிரோத ஊடுருவலைத் தடுப்பது, ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்துவது, எல்லையில் உள்ள சவால்களைச் சமாளிப்பதற்கு நெருங்கிய ஒத்துழைப்புக்கான தேவை, நம்பிக்கையைக் கட்டமைக்கும் நடவடிக்கை ஆகியன குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.இருநாடுகளிடையே நடைபெற்ற பேச்சுக்கள் குறித்த ஆவணங்களில் இருநாட்டு எல்லைக் காவல் படைகளின் தலைவர்களும் நேற்றுக் கையொப்பமிட்டதாகவும், அடுத்த கூட்டத்தை நவம்பர் மாதத்தில் வங்கதேசத் தலைநகர் தாக்காவில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.



