
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்குக் கனமழை முதல் மிகக் கனமழை பெய்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக மாவட்டட நிர்வாகங்களுக்கு அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்குக் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி ஆணையரும், வருவாய் நிர்வாக ஆணையருமான ராஜேஷ் லக்கானி அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அந்தக் கடிதத்தில் தமிழகத்தில் கனமழை முதல் மிகக் கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டிருப்பதால் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மேலும் பேரிடர்களை கையாள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும். தேவையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வதோடு தேவையான உபகரணங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றவும் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இன்று திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேன, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதே போன்று சனிக்கிழமை கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும், ஞாயிற்றுக் கிழமை திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

