
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. மே 4 ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர், விஜயின் தமிழக வெற்றிக் கழகம், ராமதாஸ் – சசிகலா கூட்டணி என்று 5 முனை போட்டி நிலவி வருகிறது.
இதில் நேரடி போட்டி என்பது திமுக கூட்டணி – அதிமுக கூட்டணி இடையே தான் உள்ளது. ஆட்சியை தக்கவைக்கும் முனைப்பில் திமுகவும், மீண்டும் ஆட்சியை அமைக்க வேண்டும் என்று அதிமுகவும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் தான் லோக்போல் (Lok Poll) சார்பில் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு தொகுதிக்கும் சுமார் 500 பேர் என்ற அடிப்படையில் மொத்தம் 1,17,000 பேரிடம் கூறிய கருத்துகளின் அடிப்படையில் தற்போது அதன் முடிவுகள் வெளியிடப்பட்டது.
அதன்படி, தமிழக சட்டசபை தேர்தலில் மீண்டும் திமுக தான் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது
திமுக கூட்டணி 181முதல் 189 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், திமுக கூட்டணிக்கு சுமார் 40.1 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கருத்து கணிப்பால் திமுகவினர் ஹேப்பியாகி உள்ளனர்.
அதேவேளையில் இந்த கருத்து கணிப்பு அதிமுக கூட்டணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. அதன்படி அதிமுக கூட்டணி 38 முதல் 42 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும். இந்த கூட்டணிக்கு 29 சதவீத ஓட்டுகள் தான் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


