
சட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பியது தமிழக மக்களையும், சட்டமன்றத்தையும் கவர்னர் அவமதிப்பதாகும் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை:தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக இந்தச் சிறப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;
‘எனது உடல்நலனை விட மாநில மக்களின் நலனே முக்கியம். அவசரம், அவசியம் கருதி தமிழ்நாட்டின் நலனுக்காகச் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்கும் செயல்கள் நடைபெற்று வருகின்றன.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டியது கவர்னரின் கடமையாகும். மசோதாக்கள் மீது ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசிடம் கவர்னர் விளக்கம் கோரலாம். தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்பியுள்ளார்.
சட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பியது தமிழக மக்களையும், சட்டமன்றத்தையும் கவர்னர் அவமதிப்பதாகும். கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப இருக்கிறோம்.’ ‘ இவ்வாறு அவர் பேசி வருகிறார்.


