
முதலில் யோகா மேட்டில் பத்மாசன தோரணையில் அமர்ந்து ஆழமாக மூச்சு விட்டுத் தியானம் செய்யவும். ‘ஓம்’ என்ற வார்த்தையை உச்சரித்தபடியே, இரு கைகளையும் இணைத்து நமஸ்காரம் செய்வது போல வைத்துக்கொள்ளவும். இதற்குப் பிறகு, உடலைச் சூடேற்ற சில சுக்ஷ்யாமா பயிற்சி செய்யுங்கள்…
முதலில் ஸ்ட்ரெட்சிங் செய்யவும்:
இந்த ஆசனத்தைச் செய்யும் முன், உங்கள் கால்களை ஸ்ட்ரெட்ச் செய்வது அவசியமாகும். இதற்கு உங்கள் இரு கால்களையும் முன்னோக்கி நேராக வைக்கவும். உங்கள் முதுகுப் பகுதியும், பின் பகுதியும் நேராக இருக்க வேண்டியது மிக அவசியமாகும். முதலில் ஒரு காலை மடக்கி அதை மேலும் கீழுமாக ஆட்டவும். பின்னர் மற்ற காலை மடக்கி அதே போலச் செய்யவும், அடுத்து உங்கள் இடுப்பு எலும்புகளை (பெல்விக்) நோக்கி உங்கள் பாதம் வருவது போல முழங்கால்களை மெதுவாக மடக்க வேண்டும்.
இரண்டு பாதங்களை ஒன்று சேர்க்க வேண்டும். உங்களுடைய இடுப்பு பகுதியை நோக்கி எவ்வளவு தூரம் உங்களால் கொண்டுவர முடியுமா அவ்வளவு தூரம் பாதங்களைக் கொண்டு வாருங்கள். இந்த நிலையில் உங்கள் முழங்கால்கள் பட்டாம்பூச்சி இறக்கைகள்போல் இருக்கும். இப்போது இரு கைகளாலும் உள்ளங்கால்களை உறுதியாகப் பிடித்துக்கொண்டு, கழுத்து மற்றும் முதுகை நேராக வைத்து உட்காரவும். இப்போது உடல் முழுவதும் நீட்டப்படுவதை உணர்வீர்கள்.

இப்படி பயிற்சி செய்யுங்கள்:
இந்த நிலையில் சிறிது நேரம் அமர்ந்தபிறகு பயிற்சியைத் தொடங்குங்கள். இதற்கு, பட்டாம்பூச்சியைப் போல உங்கள் முழங்கால்களை மேலும் கீழுமாக நன்றாக ஆட்டவும். இப்போது தொடர்ந்து 1 நிமிடம் உங்கள் முழங்கால்களை மேலும் கீழும் நகர்த்தி, பின் ஓய்வெடுக்கவும். இந்த வழியில், 4 முதல் 5 செட்களில் குறைந்தது 5 நிமிடங்களுக்குத் தினமும் பட்டாம்பூச்சி ஆசனத்தைப் பயிற்சி செய்யுங்கள்.
இந்த ஆசனத்தின் பலன்கள்:
பட்டாம்பூச்சி ஆசனம் செய்வதன் மூலம், உங்கள் இடுப்பு பகுதியில் ஒரு நீட்சி ஏற்படும். இது பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தவிர, இடுப்பு, உள் தொடைகள், முதுகு மற்றும் கால்களின் தசைகளில் நீட்சி ஏற்படுவதால் மன அழுத்தத்தைப் போக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமின்றி, செரிமானம் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்கவும் உதவும். இதனால் உடல் எடை குறைவதிலும் நன்மை கிடைக்கும்.
குறிப்பாகப் பெண்களுக்கு இந்த ஆசனம் மிகவும் உதவியாக இருக்கும். பிரசவத்தின்போது உதவும் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றான பெல்விக் பகுதியை உறுதியாக்க இந்த ஆசனம் பயன்படுவதால் இது பிரசவத்தை எளிமையாக்குகிறது. இந்த ஆசனம் வயிறு சார்ந்த உறுப்புகள், கருப்பை மற்றும் புரோஸ்டேட் சுரப்பிகளின் செயல்திறனை தூண்டுகிறது. கால்கள் மற்றும் அடி வயிற்றில் அடிக்கடி பிடிப்பு ஏற்படும் பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைச் செய்தால், நல்ல தீர்வு கிடைக்கும்.



