
திருப்பூர்: திருப்பூரில் ஜிஎஸ்டி குறித்து கேள்வி கேட்ட பெண்ணை தகாத வார்த்தைகளில் பேசி பா.ஜ.,வினர் தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. இதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் பகுதியில் பிரசாரத்திற்கு சென்ற பா.ஜ.,வினரிடம் ஜி.எஸ்.டி வரி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை அக்கட்சியினர் தகாத வார்த்தைகளில் பேசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தின்போது நடந்தவற்றை அப்பெண்ணே வீடியோ எடுத்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. இதற்கு திமுக.,வினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது பற்றி திமுக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டதாவது:
முதலில் கோவையில் பா.ஜ., வன்முறை. அடுத்து திருப்பூரில் கோழைத்தனமாக தன்னந்தனியாக நின்ற ஒரு இளம்பெண் மீது கொலைவெறித் தாக்குதல்! கோவையில் தோல்வி நிச்சயம் என்றதும் வன்முறை வெறியாட்டம் ஆட துவங்கியுள்ளது பா.ஜ.,. திருப்பூரிலும் ஒரு பெண்மணி ஜி.எஸ்.டி அநியாயங்கள் குறித்து துணிவாகவும் நேர்மையாகவும் கேட்டதற்கு பா.ஜ.,வின் 5 பேர்கள் சேர்ந்து அந்த இளம் பெண்ணை தாக்கியுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இந்த அடாவடி அராஜகக் கூட்டம் அமைதியான கோவை-திருப்பூருக்கும், தமிழகத்திற்கும் தேவையா?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.


