Lok Sabha Election 2024: நெல்லை பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்தடைந்தார் ராகுல் காந்தி!

Advertisements

தமிழகத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று நெல்லையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று நெல்லையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த பிரசாரத்தின் போது நெல்லை உள்ளிட்ட 6 தென் மாவட்டங்களை சேர்ந்த நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே அமைந்துள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்ட மேடையில் பேசுகிறார். மேலும் ராகுல் காந்தியுடன் இணைந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த நிலையில் நெல்லை பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மதுரை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த ராகுல் காந்திக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரையிலிருந்து ஹெலிகாப்டரில் ராகுல் காந்தி நெல்லை செல்கிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *