Tirumangalam: ரூ.6 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை!

Advertisements

திருமங்கலம்:ரம்ஜான் பண்டிகை வருகிற 11-ந்தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு தென்மாவட்டங்களில் மிக முக்கிய ஆட்டுச் சந்தையான திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் விற்பனையாகும் ஆடுகளின் இறைச்சி சுவை மிகுந்ததாக இருப்பதால் இங்குப் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்வார்கள்.

இந்த ஆட்டுச் சந்தையில் திருமங்கலம் மட்டுமல்லாது மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆட்டு வியாபாரிகள் ஆடுகள் வாங்க வந்திருந்தனர். ரம்ஜான் பண்டிகை நெருங்கி வருவதால் விற்பனையாகும் ஆடுகளின் விலை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஆடுகளின் விலை ஆயிரம், ரூ.3000 வரை விலை உயர்ந்துள்ளதாகவும், ரம்ஜான் பண்டிகையால் வரத்து குறைவு என்பதால் வேறு வழியின்றி வாங்கி செல்வதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். ஆடுகள் வரத்து குறைவு காரணமாக ஆடுகளின் விலை உயர்ந்துள்ளதாக ஆட்டு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

தற்போது தேர்தல் காலம் என்பதால் ஆடுகளை வாங்க வருபவர்களும், விற்பனை செய்யக்கூடிய வியாபாரிகளும் கையில் பணம் எடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் அதிக பணத்தை கொண்டு வர முடியாததால் பகிர்ந்து கொண்டு செல்வதாகவும், ஏற்கனவே எங்களை நம்பி ஆடுகளைக் கொடுத்து விடும் மக்களுக்கு நாங்கள் உரிய முறையில் பணத்தைக் கொண்டு செலுத்த வேண்டும். ஆனால் தேர்தல் அதிகாரிகள் கெடுபிடியால் அதிக தொகையைக் கொண்டு செல்வதில் அச்சம் நிலவுவதாகவும், இதற்குத் தேர்தல் அதிகாரிகள் எங்களைப் போன்ற வியாபாரிகளுக்குச் சலுகைகள் கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் அதிகாலை 2 மணி முதல் ஆடு விற்பனை களை கட்டியது. இன்று ஒரு நாள் மட்டும் ரூ.6 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக ஆட்டுச் சந்தை குத்தகைதாரர்கள் தெரிவித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *