
கமலஹாசனை விட மாநாட்டில் விஜய் நன்றாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.
மதுரை:விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு பல தடைகளைத் தாண்டி வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. 5 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் கூடியதைக் கண்டு, கட்சியின் தலைவர் விஜய் மேடையிலேயே கண் கலங்கினார்.
திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் 45 நிமிடங்கள் பேசிய விஜய், மக்கள் தனிப்பெரும்பான்மையுடன் 100 சதவீதம் வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்றாலும், நம்மை நம்பி கூட்டணிக்கு வருவோருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். விஜய்யின் இந்தப் பேச்சுக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு,
இயக்குநர் சங்கர் படம் போன்று விஜய் மாநாடு பிரமாண்டமாக இருந்தது. விஜய் பட ஓப்பனிங் போலத் தவெக மாநாடு சிறப்பாக இருந்தது. போகபோகத்தான் கட்சி செயல்பாடுகள் எல்லாம் தெரியும். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் விஜய் அருமையாகப் பேசினார். கமல்ஹாசனை காட்டிலும் விஜய் சூப்பராகப் பேசினார். எனவே கமல்ஹாசன் மீது எனக்குக் கோபம் இல்லை. கமல்ஹாசனின் இந்தியன்-2 திரைப்படம் தொடக்கத்தில் நன்றாக இருந்தாலும், முடிவில் ஒன்றுமில்லை என்பதால் பிளாப் ஆகிவிட்டது. அதுபோல விஜய் அல்ல. திமுகவில் உள்ள இளைஞர்கள் 50 சதவீதம் பேர் விஜயின் ரசிகர்கள் என்பதால் திமுகவின் ஓட்டுகள் இனி தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்லலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
