Advertisements

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்கள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்கவில்லை எனக் கூறி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதில் படுகாயம் அடைந்தனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 9 போலீசாரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் முழு விசாரணையும் முடிந்து கடந்த மாதம் 23ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.
கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார்.
அவர்களுக்கான தண்டனை விவரம் 30ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும், தண்டனை குறித்து சி.பி.ஐ. மற்றும் மாநில அரசு தங்களது நிலைப்பாட்டை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதனால் இந்த வழக்கை ஏப்ரல் 2ஆம் தேதி நீதிபதி ஒத்திவைத்தார். அதன்படி இந்த வழக்கு நீதிபதி முத்துக்குமரன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட காவலர்கள் ஒன்பது பேரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் இவர்களுக்கு எவ்வளவு தண்டனை வழங்கலாம் என்ற பரிந்துரையை மாநில அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு தரப்பில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து இந்த வழக்கின் தண்டனை விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, தந்தை மற்றும் மகன் இருவர் மீது பொய் வழக்கு பதிந்துள்ளனர். இது தெரியாமல் நடந்த தவறு அல்ல. குற்றவாளிகள் அனைவரும் நன்கு படித்தவர்கள், அரசு பணியில் உள்ளவர்கள். வேலியே பயிரை மேய்ந்தது போல் உள்ளது.
தந்தை முன் மகனையும் மகன் முன் தந்தையையும் நிர்வாணப்படுத்தி மனம்போன போக்கில் தாக்கி உள்ளனர். ஆயுள் தண்டனை வழங்கினால் போலீசாருக்கு அச்சத்தை ஏற்படுத்தாது. எனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.
Advertisements



