காமராஜர் பிறந்தநாளில் இரவு பாடசாலைகளை தொடங்க திட்டம்! நடிகர் விஜய் அதிரடி முடிவு!

Advertisements

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிகரித்துள்ளது. நடிகர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி, கடந்த மாதம் 28ஆம் தேதி உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்டம் மூலம் ஏழைகளுக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மதிய உணவு வழங்கினர்.

இந்த நிலையில்தான் நடிகர் விஜய் அடுத்த தலைமுறை வாக்காளர்களான மாணவர்களை சந்தித்து பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். தற்போது தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். இரண்டாவது நாளான இன்று விஜய் மக்கள் இயக்க தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். பெரியார், காமராஜர், அண்ணாவை பற்றி பள்ளி மாணவர்கள் படிக்க வேண்டும் என மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் இந்த கூட்டத்தில் 234 தொகுதிகளிலும் இரவு நேர பாடசாலையை காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15ஆம் தேதி தொடங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

கல்வி கண் திறந்த காமராஜர் பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. கண்தானம் செய்வதற்காக விழியகம், இரத்த தானம் செய்வதற்காக குருதியகம், பசி பட்டினியால் தவிப்போருக்காக விருந்தகத்தை தொடங்கிய விஜய் தற்போது பள்ளி மாணவர்களுக்காக இரவு நேர பாடசாலையை தொடங்குகிறார். மேலும் முழு நேரமாக அரசியலுக்கு வந்துவிட்டால் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என நடிகர் விஜய் பொறுப்பாளர்கள் முன்னிலையில் பேசியதாக கூறப்படுகிறது. விஜய் எப்போது அரசியலுக்கு வந்தாலும் தீவிரமாக பணியாற்ற தயாராக இருப்பதாக மக்கள் இயக்க பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *