Tenkasi: பேருந்தில் இருக்கையில் அமர்ந்தது குற்றமா? சாதி பார்த்துத் திருட்டு பழி? பெண் குமுறல்!

Advertisements

தனியார் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணியின் பணப்பை மாயமான நிலையில், தங்கள் மீது எவ்வித விசாரணையும் நடத்தாமல் பொய் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளதாக இளம்பெண் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியைச் சேர்ந்த சிம்மி என்பவர் கைக்குழந்தையுடன் இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், கடந்த 12ம் தேதி சுரண்டையிலிருந்து கடையம் பகுதிக்குப் பழைய துணிகளை வாங்குவதற்காக நானும், எனது அக்காவான பவானி மற்றும் உறவினர் பெண்ணான அஞ்சலி ஆகிய மூன்று பேரும் தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தோம்.

அப்பொழுது, பேருந்து இருக்கையில் ஒரு பெண் அமர்ந்த நிலையில் அந்தப் பெண்ணின் அருகாமையில் எனது உறவினர் பெண்ணான அஞ்சலி அதே  இருக்கையில் அமர்ந்தார். அப்பொழுது அந்த இருக்கையில் இருந்த சேந்தமரம் காவல் உதவி ஆய்வாளர் ஜெயராஜ் என்பவரின் மனைவியான பால்தாய் என்பவர் தங்களை வேறு இருக்கையில் அமருமாறு கூறிய நிலையில், அதற்குத் தாங்களும் மனிதர்கள் தான், நாங்களும் டிக்கெட் எடுத்துத் தான் பேருந்தில் பயணம் செய்கிறோம் எனக் கூறிய நிலையில், கோபம் அடைந்த பால்தாய் அடுத்த பேருந்து நிலையத்தில் இறங்கி சென்றார்.

இந்த நிலையில், சில கிலோமீட்டர் தூரம் சென்ற பேருந்தைத் திடீரென இரண்டு போலீசாருடன் வந்து மறித்துத் தன்னுடைய பர்சை காணவில்லையெனப் பால்தாய் கூறினார். உடனே பேருந்து நடத்துனர் கீழே கிடந்த பர்ஸை எடுத்துப் பால்தாயிடம் கொடுத்த நிலையில் அந்தப் பர்சில் சில நூறு ரூபாய் வைத்துப் பால்தாய் நடத்துனரிடம் கொடுத்தார். தொடர்ந்து, அஞ்சலி மற்றும் எனது அக்கா பவானி உட்பட எங்கள் மூவரையும் போலீசார் கடையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில், நீண்ட நேரம் காக்க வைத்து எனது அக்கா பவானி மற்றும் அஞ்சலிமீது பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

தாங்கள் எந்த விதமான தவறும் செய்யாமலேயே எங்கள்மீது பொய் வழக்குப்பதிவு செய்த கடையம் காவல்துறையினர் மீதும், எங்கள்மீது பொய் புகார் அளித்த உதவி ஆய்வாளரான ஜெயராஜின் மனைவி பால்தாய் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எந்தவிதமான தவறும் செய்யாத எனது அக்கா மற்றும் உறவினர் பெண்மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *