
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 38ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
ஐபிஎல் 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 8 போட்டிகளில் 3ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடம் பிடித்துள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல வேண்டுமானால், எஞ்சிய 6 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த 6 போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுடன் மோதுகிறது.
இதில், ஏதேனும், 3 அல்லது 2 போட்டிகளில் தோல்வி அடைந்தால் பிளே ஆஃப் வாய்ப்பை இழக்க நேரிடும். மும்பை இந்தியன்ஸ் அணியானது அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி அடைந்து பின்னடைவை சந்திப்பதற்கு அணியின் கேப்டன்ஸி தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
ஒரு கேப்டனாகத் தனது பொறுப்பை உணர்ந்து விளையாடாத ஹர்திக் பாண்டியா, பவுலிங்கிலும் சொதப்பி வருகிறார். அதுமட்டுமின்றி புதிய பந்தில் பும்ராவிறு ஓவர் கொடுக்காமல் முதல் ஓவரைத் தானாகவே வீசி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், ஹர்திக் பாண்டியா என்று பேட்டிங் ஆர்டர் இருந்தாலும், பவுலிங்கில் ஜஸ்ப்ரித் பும்ரா, பியூஷ் சாவ்லா, ஜெரால்டு கோட்ஸி என்று திறமைமிக்க அனுபவமிக்க பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர்.
இவர்கள் தவிர பந்து வீச்சு பயிற்சியாளராக லசித் மலிங்கா இருக்கிறார். மேலும், தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் இருக்கிறார். இவர்கள் தவிர, கிரான் பொல்லார்டு, சச்சின் டெண்டுல்கரும் பக்க பலமாக இருக்கின்றனர். அப்படி இருந்தும் மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்காகப் போராடி வருகிறது. இதற்கு முக்கிய காரணமே ஹர்திக் பாண்டியா தான் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
இந்தச் சீசனில் அவர் விளையாடிய இன்றைய போட்டி உள்பட 8 போட்டிகளில் றையே 11, 24, 34, 39, 21*, 2, 10, 10 (ஆர்ஆர் போட்டி) என்று மொத்தமாக 151 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், நேற்று நடந்த போட்டி உள்பட 17 ஓவர்கள் வீசி 186 ரன்கள் கொடுத்துள்ளார். அதோடு, 4 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி காரணங்களைப் பட்டியலிட்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த நிலைக்கு ஹர்திக் பாண்டியா தான் காரணம் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா மீண்டும் பொறுப்பேற்றால் மட்டுமே அணியின் வெற்றி தொடரும் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.



