
புதுடில்லி: ஏர் இந்தியா விமான நிறுவனம், 68 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் டாடா குழுமத்திடமே வந்தது ரத்தன் டாடாவை உணர்ச்சி வசப்பட வைத்த தருணம் என்கின்றனர், அந்நிறுவன அலுவலர்கள்.
கடந்த 1932ல் ‘டாடா ஏர்லைன்ஸ்’ என்ற பெயரில் விமான போக்குவரத்து நிறுவனத்தை ஜே.ஆர்.டி. டாடா எனப்படும், ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா துவக்கினார். இரண்டாம் உலகப் போருக்குப் பின் டாடா ஏர்லைன்ஸ் நிறுவனம், ஏர் இந்தியா நிறுவனம் எனப் பெயர் மாற்றப்பட்டது. இதன்பின் ஏர் இந்தியா நிறுவனத்தை, அப்போதைய பிரதமர் நேரு, தேசியமயமாக்கினார். விமான போக்குவரத்து சேவையில் தனியார் நிறுவனங்களும் ஈடுபட, 1990களில் மத்திய அரசு அனுமதியளித்தது.
‘மஹாராஜா’ சின்னத்துடன் உலகம் முழுதும் வலம் வந்த ஏர் இந்தியா நிறுவனம், நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் தனியாருடன் போட்டி போட முடியாத நிலை ஆகியவற்றால் கடும் நஷ்டத்தைச் சந்திக்கத் துவங்கியது. ஏர் இந்தியா விமானங்களை இயக்குவதில், நாள்தோறும் மத்திய அரசுக்கு 20 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்க மத்திய அரசு முயற்சித்தது. பின்னர், ஏர் இந்தியா நிறுவனத்தை 18 ஆயிரம் கோடி கொடுத்து, மீண்டும் அதன் தாய் நிறுவனமான டாடா குழுமமே வாங்கியது.
ஏர் இந்தியா நிறுவனம், 58 உள்நாடு, 45 வெளிநாடு என மொத்தம் 103 வழித்தடங்களில் விமான சேவையை இயக்கி வந்தது. 31 நாடுகளில் இதன் விமான சேவை உள்ளது. ஏர்பஸ், போயிங் உட்பட 123 விமானங்கள் உள்ளன.
ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் கைக்கு வந்ததால் மகிழ்ச்சியடைந்த டாடா குழும தலைவர் ரத்தன் டாடா, ‘ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் எங்கள் கைக்கு வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஏர் இந்தியாவை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இந்த நிறுவனத்தை மீண்டும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். விமான போக்குவரத்து சேவையில் டாடா மீண்டும் முத்திரை பதிக்கும்,’ என்று குறிப்பிட்டிருந்தார்.
டாடா நிறுவனம் ஏற்கனவே ‘சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து, ‘ஏர் விஸ்தாரா’ என்ற விமான போக்குவரத்து நிறுவனத்தையும், ‘மலேஷியா ஏர்லைன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து, ‘ஏர் ஆசியா’ விமான போக்குவரத்து நிறுவனத்தையும் நடத்தி வருகிறது. இதில் மூன்றாவதாக ஏர் இந்தியாவும் இணைந்தது.
டாடா குழும முன்னோடி ஜே.ஆர்.டி. டாடாவால் உருவாக்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம், 68 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் தங்களிடம் வந்ததை மிகவும் சென்டிமென்ட் ஆகக் கொண்டாடினார் ரத்தன் டாடா. ‘அவரது வாழ்க்கையில் மிகவும் உணர்ச்சி வசப்பட வைத்த தருணம் இதுதான்’ என்கின்றனர், நிறுவன அலுவலர்கள். ‘இப்போது ஜே.ஆர்.டி.டாடா இருந்திருந்தால் மிகவும் அகமகிழ்ந்து போயிருப்பார்’ என்று, ஏர் இந்தியா திரும்பக் கிடைத்த தினத்தில் ரத்தன் டாடா கூறியது குறிப்பிடத்தக்கது.


