
இந்தியாவின் பண்டைய பாரம்பரிய அறிவு உலகத்துக்கு உதவும் என்று மத்தியச் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்..
மகாராஷ்டிரத்தின் நாகபுரியில் சோகம் அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டுள்ள வேதபாடசாலையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடக்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், உலகின் பல பகுதிகளில் தகராறுகளும் சண்டையும் நடைபெறும் நிலையில், பண்டைய இந்தியப் பண்பாடும், விழுமியங்களும், தத்துவங்களும் உலகுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்திய வேதப் பாரம்பரியத்துக்குப் புத்துயிரூட்ட வேண்டியதன் தேவையை அவர் வலியுறுத்தினார். நமது பண்பாடு தனிமனித நலன், குடும்ப நலன் ஆகியவற்றைப் பற்றி மட்டும் பேசாமல் ஒட்டுமொத்த உலக நலன் பற்றிப் பேசுவதாகத் தெரிவித்தார்.
உலக நாடுகளில் போர்களும் அதனால் பேரழிவுகளும் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியப் பண்பாட்டு விழுமியங்கள் நல்லிணக்கம், இணைந்து வாழ்தல் ஆகியவற்றை வலியுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.


