
தமிழ்நாட்டில் நாளை மாலையுடன் தேர்தல் பரப்புரை முடிவடைய உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் சூறாவளிப் பரப்புரை மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஏப்ரல் 21ஆம் நாள் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு நடைபெறும் தேர்தல் பரப்புரை நாளை மாலையுடன் ஓயும். இன்றும் நாளையும் என இரண்டு நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வேட்பாளர்களும் சுயேச்சை வேட்பாளர்களும் இறுதிக்கட்டப் பரப்புரையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
நடந்து சென்றும் திறந்த வாகனங்களில் சென்றும் வீதி வீதியாகப் பொதுமக்களைச் சந்தித்து வாக்குச் சேகரித்து வருகின்றனர். சென்னை சோழிங்கநல்லூர்த் தொகுதி திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேசை ஆதரித்துத் துணை முதலமைச்சர் உதயநிதி திறந்த வாகனத்தில் சென்று பரப்புரை செய்து வாக்குச் சேகரித்தார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திருவள்ளூர் சென்னை மாவட்டங்களில் உள்ள பல்வேறு தொகுதிகளில் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரை மேற்கொண்டார்.



