
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் , அரசியல் களம் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில், விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் சொத்து விவரங்கள் தொடர்பாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
2 தொகுதிகளில் போட்டியிடும் அவர், வேட்புமனுக்களில் சொத்து மதிப்பை வேறுபடக் குறிப்பிட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பி, சம்பந்தப்பட்ட துறைகளிடம் விளக்கம் கேட்டு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் ஏற்பட்டுள்ள இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது வேட்புமனுவில் ₹100 கோடி மதிப்பிலான சொத்துக்களைக் குறைத்துக் காட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில், த.வெ.க. தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இரு தொகுதிகளிலும் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்துக்கணக்கை மறைத்துள்ளதாகவும் கூறி, வியாசர்பாடியைச் சேர்ந்த பெரம்பூர் வாக்காளரான விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
.
அந்த மனுவில், பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது சொத்து மதிப்பு, 115 கோடியே 13 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் எனக் குறிப்பிட்டிருந்த விஜய், திருச்சி கிழக்கு தொகுதிக்கான வேட்புமனுவில், 220 கோடியே 15 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்ட சொத்து மதிப்பை விட, பெரம்பூரில் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறைவாக காட்டியது உண்மைத் தகவலை மறைத்ததற்கு சமம் என்பதால், விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் தெரிவித்துள்ள சொத்து விவரங்கள் முழுமையானவையா? உண்மையானவையா என விசாரிக்க, வருமான வரித்துறைக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ். ஜே. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரண்டு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தவர், ஒரு தொகுதியில் 100 கோடி ரூபாய் வரை குறைத்து காட்டியது முறைகேடானது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
பின்னர், இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்கும்படி வருமான வரித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், விஜய்யின் சொத்து விவரங்கள் குறித்த இந்த நீதிமன்ற விசாரணை அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே விஜய்யின் விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இந்தச் சொத்து முறைகேடு புகாரும் சேர்ந்து தவெக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



