
“மாதம் 2,500 ரூபாய் வாக்குறுதியைச் செயல்படுத்த நேரம் கேட்கும் முதலமைச்சர் விஜய், 4,000 ஊழியர்களின் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதைப் பற்றி ஏன் யோசிக்கவில்லை?” என்று டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கம் எழுப்பியுள்ள அனல் பறக்கும் கேள்வி தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கோயில்கள் மற்றும் பள்ளிகள் அருகே உள்ள 717 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ள நிலையில், இதனால் நேரடியாகப் பாதிக்கப்படும் 4,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு மாற்று வாழ்வாதாரம் வழங்கக் கோரி எழும்பூர் மேலாண்மை இயக்குனர் அலுவலகம் முன்பு ஊழியர்கள் திரண்டு கொந்தளிப்பான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..இது குறித்த பின்னணி தகவல்களை தற்பொழுது விரிவாக பார்க்கலாம்…
தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் உத்தரவின்படி மாநிலத்தில் உள்ள 717 டாஸ்மாக் மதுக்கடைகள் உடனடியாக மூடப்பட உள்ளன. கோயில்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே உள்ள கடைகள் முதலில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் இந்தத் திடீர் முடிவால் டாஸ்மாக் ஊழியர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கம் இந்த உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் எழும்பூரில் உள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அலுவலகம் முன்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டார்.ஊழியர்களின் எதிர்காலம் குறித்து அரசு உடனடியாக தெளிவான பதில் அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
கடைகள் திடீரென மூடப்படுவதால் பல ஊழியர்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக அவர் கொந்தளிப்புடன் தெரிவித்தார். 3,500 முதல் 4,000 பேர் பாதிப்பு தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் நிறுவனத்தில் சுமார் 23,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 717 கடைகள் மூடப்படுவதால் 3,500 முதல் 4,000 ஊழியர்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள் என்று சங்கத்தினர் மதிப்பீடு செய்துள்ளனர்.
ஒவ்வொரு ஊழியரின் குடும்பமும் இந்த வருமானத்தை நம்பி வாழ்கிறது. இவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு அல்லது உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊழியர்களின் குடும்பம் குறித்து அரசு சிந்தித்ததா? போராட்டத்தில் ஈடுபட்ட சங்கத் தலைவர், “பெண்கள் உட்பட பொதுமக்கள் டாஸ்மாக் கடை மூடலை வரவேற்கிறார்கள் என்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் ஊழியர்களின் குடும்பங்கள் என்ன ஆகும்?” என்று கேள்வி எழுப்பினார்.
முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியாக அளித்த மாதம் 2, 500 ரூபாய், தங்கம், சிலிண்டர் உள்ளிட்ட உதவிகளை கூட இன்னும் முழுமையாக வழங்கவில்லை, இதை செயல்படுத்த நேரம் கேட்டுள்ளார். ஆனால் 4000 ஊழியர்கள் குடும்பம் பாதிக்கப்படும் என்பதை குறித்து முதல்வர் டாஸ்மாக் கடைகள் மூடுவது குறித்து யோசித்தாரா..? இப்போது ஊழியர்களை நடுத்தெருவில் நிறுத்துவதற்கு முன்பு அவர்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நிரந்தர வேலை – அரசு வாக்குறுதி என்ன ஆனது? முதலமைச்சர் விஜய் தூய்மைப் பணியாளர்கள், அரசு ஆசிரியர்கள், செவிலியர்கள், மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட பல துறைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 5 ஆண்டுகள் பணிக்குப் பின் நிரந்தரப் பணி உறுதி செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தார்.ஆனால் டாஸ்மாக் ஊழியர்களுக்கு மட்டும் இந்த உத்தரவாதம் ஏன் இல்லை என்று சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் நீதிமன்றம் ஏற்கெனவே ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும், அரசு அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஊழியர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யாமல் கடைகளை மூடுவது சரியல்ல என்று சங்கம் கூறியுள்ளது.
உண்மையிலேயே பொதுமக்கள் நலன் மீது அக்கறை இருந்தால் 4,765 டாஸ்மாக் கடைகளையும் முழுமையாக மூட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். முதலமைச்சர் விஜய் உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்தப் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது…




