
ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரியங்க் கார்கே மற்றும் முகமது நல்பாட் ஆகியோருக்கு எதிராக கிரிமினல் வழக்கு பதிவு செய்ய பெங்களூரு சிட்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏ. தேஜாஸ் என்பவர் தொடர்ந்திருந்த இந்த அவதூறு வழக்கை ஆய்வு செய்த நீதிபதி, புகாரில் முகாந்திரம் இருப்பதாகக் கருதி இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பாரதிய நியாய சன்ஹிதா (BNS) 2023-ன் பிரிவு 356-ன் கீழ், பிரியங்க் கார்கே முதல் குற்றவாளியாகவும், முகமது நல்பாட் மூன்றாவது குற்றவாளியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் அடிப்படையில் இருவருக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் வரும் ஜூலை 21-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் மீது போதிய முகாந்திரம் இல்லை எனக் கருதிய நீதிமன்றம், அவர் மீதான புகாரைத் தள்ளுபடி செய்து அவரை வழக்கில் இருந்து விடுவித்துள்ளது. முக்கியப் பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட இந்த அவதூறு வழக்கு, கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




