Advertisements

கல் குவாரிகள் இயங்குவதற்கான கால அளவை உயர்த்தும் முடிவைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்குவாரிகள் இயங்குவதற்கான கால அளவை 25 ஆண்டுகள் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதைக் கண்டித்துள்ளார். கல்குவாரிகளில், பல ஆண்டுகளாக அனுமதிக்கப்பட்ட அளவைவிடப் பல மடங்கு அதிகமான பரப்பளவில், அதிகமான ஆழத்தில் முறைகேடாகக் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டியுள்ளார். அவற்றை முறையாகக் கண்காணித்து, ஆய்வு செய்து, முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது எந்த நடவடிக்கையையும் தமிழ்நாடு அரசு எடுப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். கனிம வளக்கொள்ளையைத் தடுக்க முயலும் அரசு அதிகாரிகள், புகார் தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள், கனிமவளக் கொள்ளையர்களால் பட்டப்பகலில் படுகொலை செய்யப்படுவதை திமுக அரசு வேடிக்கை பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இயற்கையின் அருட்கொடையாம் மலை, மணல் உள்ளிட்ட இயற்கை வளங்களைக் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி வெட்டி எடுக்க அனுமதிப்பது வருங்காலத் தலைமுறைக்குச் செய்கின்ற பச்சைத் துரோகமாகும் என்றும் சீமான் சுட்டிக்காட்டியுள்ளார்.
Advertisements

