
தமிழ்நாடு தொழில் துறையில் முன்னோடியாக திகழ்ந்து வருவதற்கு டாடா மோட்டார்ஸ் தொழில் நிறுவனமே சாட்சி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகம் துறை சார்பில், ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் சிப்காட் தொழிற் பூங்காவில், ரூபாய் 9 ஆயிரம் கோடியில் முதலீடு மற்றும் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், டாடா மோட்டார்ஸ் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை அமைப்பதற்கு, கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில் டாடா தொழிற்சாலைகளை திறந்து வைத்து, தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள முதல் வாகனத்தின் இயக்கத்தை தொடங்கி வைப்பதற்காக இன்று மு.க.ஸ்டாலின் பனபாக்கத்திற்கு வருகை தந்தார். வழி நெடுகிலும் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மேளதாளம், தாரை தப்பட்டை, ஒயிலாட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மாவட்ட தி.மு.க. செயலாளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் டாடா தொழிற்சாலை வளாகத்தில் உள்ள ரத்தன் டாடா உருவச் சிலைக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து டாடா தொழிற்சாலையினை திறந்து வைத்து, தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள முதல் வாகனத்தின் இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த ஆலையின் முதலாவது ஜாகுவார் லேண்ட்ரோவர் வாகனத்தை ஓட்டி பார்த்தார். கார்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை தொடங்கி வைத்ததில் மிகவும் பெருமை அடைகிறேன் என்றும், தமிழ்நாடு தொழில்துறையில் முன்னோடியாக திகழ்ந்து வருவதற்கு, இந்த டாடா மோட்டார்ஸ் தொழில் நிறுவனமே ஒரு சாட்சி என்றும். இந்தியாவின் தொழில் நிறுவனங்களில் மிக முக்கியமானது டாடா நிறுவனம் என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்..




