Durai Vaiko:விஜய் கட்சியுடன் கூட்டணியா?

கன்னியாகுமரி:ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ கன்னியாகுமரியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு, ஒன்றிய அரசு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்க மறுப்பதால் தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத சூழல் உள்ளது. கொரோனா காலகட்டத்தில் விடுபட்ட மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வந்தது, காலை உணவு திட்டம், ஸ்மார்ட் கிளாஸ் என அனைத்து திட்டமும் தமிழக அரசால் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு இந்தியாவுக்கு முன் உதாரணமாக இருந்து வருகிறது.

மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தால். தேசிய கல்விக் கொள்கையில் இணைந்தால் மட்டுமே நிதி அளிக்கப்படும் என்கிறார். இதனால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளும் கூட கடுமையாக பாதிக்கப்படுகிறது. மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு செயல்படுகிறது. கல்வியில் எக்காரணம் கொண்டும் அரசியல் இருக்கக் கூடாது.

பழனியில் முருகன் மாநாடு நடத்தியதை தனிப்பட்ட முறையில் நான் வரவேற்கிறேன். முருகன் தமிழ் கடவுள் மட்டும் கிடையாது. இதில் தமிழ் கலாச்சாரமும் ஒன்றிணைந்து இருக்கிறது. எல்லா அரசியல் கட்சிகளும் இஸ்லாமியர்களின் நோன்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறோம், கிறிஸ்மஸ் நிகழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாடுகிறோம்.

முருகர் என்பது தமிழ் கலாச்சாரத்தோடு சேர்ந்தது அதை ஒரு மதமாக நான் பார்க்கவில்லை. அந்த நிகழ்ச்சியில் துறை சார்ந்த அமைச்சர் கலந்து கொண்டதில் எந்த தவறும் கிடையாது. ஒரு குறிப்பிட்ட இயக்கம் இந்து மதத்தை சொந்தம் கொண்டாடி வருகின்ற இந்த வேளையில் அதை உடைப்பதற்கான புரிதலாக கூட நான் இதை பார்க்கிறேன்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நாணயம் வெளியிட்டது மத்திய அரசு. அதில் மத்திய அமைச்சர் கலந்து கொண்டது புரோட்டா கால். தொடர்ந்து மத்திய அரசினை நாங்கள் எதிர்த்து வருகிறோம். தமிழகத்தில் ஒருபோதும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாறாது. கூட்டணி மாற்றம் என்ற நிலையை தி.மு.க. தலைமை ஒருபோதும் எடுக்காது.

அண்ணாமலை அவருடைய அரசியல் அறிவை வளர்க்க படிப்பு சம்பந்தமாக வெளிநாடு சென்றுள்ளார். அதனை வரவேற்கிறேன். நாங்கள் தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம். தி.மு.க. மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அப்படி இருக்க நாங்கள் ஏன் விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும். அந்த சிந்தனை ஒருபோதும் கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *