
தாம்பரத்தில் பட்டா கத்தியைக் காட்டி மாமுல் கேட்டு அலப்பறையில் ஈடுபட்ட 4 பேரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்களிடமிருந்து 3 பட்டா கத்தி மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்ததோடு தலைமறைவாகி உள்ள 2 நபர்களைத் தேடி வருகின்றனர்.
மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரம் இரண்டாவது குறுக்கு தெருவைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவர் நேற்று இரவு அவரது மகன் யுவராஜ் மற்றும் சூர்யா ஆகியோருடன் தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்து உள்ளார்.
அப்போது அங்கு மூன்று இரு சக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று நாங்கள் பெருங்களத்துரைச் சேர்ந்த ரவுடிகள் என்றும் கத்தியைக் காட்டி மிரட்டிப் பாக்கியலட்சுமி கையில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனையும் பிடுங்கிக் கொண்டு மேலும் அப்பகுதியில் இருந்த பொது மக்களிடம் இனி ஏரியாவில் எல்லாரும் எங்களுக்கு மாமூல் கொடுக்க வேண்டும் என மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று உள்ளனர்.
இதுகுறித்து பாக்கியலட்சுமி தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் தாம்பரம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்துப் பட்டா கத்தியைக் காட்டி மாமுல் கேட்டு ரகலையில் ஈடுபட்ட ஹேமச்சந்திரன் (எ) சந்துரு, சரண்குமார், புவனேஷ், ஆனந்த் (எ) அகில் ஆகிய நான்கு பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலை மறைவாக உள்ள விக்கி, கோகுல் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் அவர்களிடமிருந்து மூன்று பட்டாக்கத்திகள் செல்போன் உள்ளிட்டவையை போலீசார் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

