
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து விஜய்யைச் சந்தித்து பேசிவருகிறார்.
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை, கட்சி பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
இதனைத் தொடர்ந்து, பசும்பொன்னில், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை செங்கோட்டையன் சந்தித்த நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது.
சென்னை தலைமைச் செயலகத்தில், சபாநாயகர் அப்பாவுவை சந்தித்த செங்கோட்டையன், கோபிச்செட்டிபாளையத்தின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
இந்தச் சூழலில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், திடீரென பட்டினப்பாக்கத்தின் விஜய் இல்லத்திற்கு வருகை தந்தார். தற்போது அங்கு தவெக தலைவர் விஜய்யை செங்கோட்டையன் சந்தித்து, கட்சியில் இணைவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கட்சியில் செங்கோட்டையனுக்கு வழங்கப்படும் பொறுப்பு குறித்து ஆலோசனைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் , மாநில நிர்வாக குழுவை கட்டுப்படுத்தும் பதவியை வழங்கப்படலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன.


