
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே மதிய உணவில் எலி மருந்து கலந்து சாப்பிட்டு அரசுப் பள்ளி மாணவிகள் 2 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்கள் கண்டித்ததால் தற்கொலைக்கு முயன்றார்களா? எனப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மொளச்சூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் மொளச்சூர், சுங்குவார்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், 10ம் வகுப்பு மாணவிகள் 2 பேர், அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் எலி மருந்து வாங்கி வந்துள்ளனர். பின்னர், அவற்றை மதிய இடைவேளையின்போது உணவில் கலந்து சாப்பிட்டுள்ளனர்.
அடுத்த சில மணி நேரத்திலே 2 மாணவிகளுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. சக மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு, மாணவிகள் இருவரையும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியர்கள் கண்டித்ததால் மாணவிகள் தற்கொலைக்கு முயன்றார்களா அல்லது குடும்ப பிரச்னையா? எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


