
வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, தமிழகத்தில் 7 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், சுமார் 9 கிலோ மீட்டர் உயரத்தில், மேற்கு ராஜஸ்தான் முதல், கன்னியாகுமரிக்கடல் வரையிலும், மற்றும் கிழக்கு ராஜஸ்தான், மத்திய பிரதேசம், விதர்பா, தெலங்கானா, ராயலசீமா மற்றும் உள்தமிழகம் வழியாக, வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் 4-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை, தமிழகத்தில் 7 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


