
இந்திய சரக்குக் கப்பல்கள் மட்டும் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லலாம் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாகவும், தடையை மீறிச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், துபாயிலிருந்து குஜராத் துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்தத் தாய்லாந்து எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும்போது, ஈரான் ராணுவம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து, அடுத்தடுத்து பிரிட்டன், ஜப்பான் சரக்கு கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, வளைகுடா நாடுகளிலிருந்து ஹோர்முஸ் நீரிணை வழியாகச் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள்களை இந்தியாவுக்குக் கொண்டுவரும் சரக்குக் கப்பல்களை அனுமதிப்பது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன், இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இந்தப் பேச்சுவார்த்தை முடிவில், ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய சரக்கு கப்பல்களுக்கு மட்டும் ஈரான் அரசு அனுமதித்துள்ளது.இதன்படி, இந்திய கொடியுடன் வந்த புஷ்பக் மற்றும் பரிமல் ஆகிய இரு சரக்கு கப்பல்களும் ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்ததாகத் தகவல்கள் வெளியாகிவுள்ளது.
இதில், ஒரு சரக்குக் கப்பல் மட்டும் மும்பை வந்தடைந்தது. மேலும், மற்றொரு கப்பல் வருகின்ற 14 ஆம் தேதி வரக்கூடும் எனவும் தகவல் வெளியாகிவுள்ளது..


