
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம், சஞ்சார் சாதி செயலி உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் விரிவான விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்துக்கு வெளியே எதிர்க்கட்சியினர் இரண்டாம் நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, எதிர்க்கட்சியினர் ஒவ்வொன்றாகக் கிளப்ப வேண்டிய தேவை இல்லை என்றும், பல சிக்கல்களைப் பற்றி அவையில் விவாதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியினர் எழுப்பும் சிக்கல்களைப் பற்றி விவாதிக்கத் திட்டமிடும்போது, அவர்கள் நாடாளுமன்றத்துக்கு இடையூறு செய்யும் வகையில் புதுப்புது விடயங்களைத் தேடிக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
ஒவ்வொருவருக்கும் அவரவர் விடயம் மிக முக்கியமானதாக இருக்கும் என்றும், நாடாளுமன்றத்தை முடக்கும் ஆயுதமாக அதைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேச்சு நடத்தியுள்ளதாகவும், நாட்டில் ஏராளமான சிக்கல்கள் இருப்பதாகவும், அவற்றைப் பற்றி விரிவான விவாதம் நடத்த உள்ளதாகவும் அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.



