
இஸ்ரேல் ராணுவம், காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
தலைநகர் பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாகக் குண்டு மழை பொழிந்ததில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.இதனையடுத்து இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று ஈரான் அரசு பகிரங்கமாக அறிவித்தது.
அதன்படி இஸ்ரேலில் உள்ள நிவேதிம் விமான தளம், நெட்ஜரிம் ராணுவ தளம் மற்றும் டெல் நாப் உளவு பிரிவு ஆகியவற்றின் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்த நிலையில், லெபனான் மீது தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதல்பற்றிக் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேல் இடத்தில் நான் இருந்திருந்தால், எண்ணெய் வயல்களைத் தாக்குவதற்கு பதிலாக, வேறு இலக்குகளைக் குறிவைத்து இருப்பேன் என்று கூறியுள்ளார்.
மேலும், பொதுமக்கள் உயிரிழப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதன் முக்கியத்துவம் பற்றிய எச்சரிக்கையை இஸ்ரேலுக்கு வலியுறுத்திய பைடன், கொடூர தாக்குதலுக்கு எதிராக, தன்னை பாதுகாத்து கொள்ள இஸ்ரேலுக்கு எல்லா உரிமையும் உள்ளது என்றும், ஈரானிடமிருந்து மட்டுமல்ல, ஹிஸ்புல்லா மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்களிடம் இருந்தும் கூட என்று தெரிவித்துள்ளார்.
லெபனானில் உள்ள பிரான்ஸ் அதிகாரிகள்மூலம், மத்திய கிழக்கு பகுதியில் முழு அளவிலான போர் ஏற்படாமல் தடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ள அவர், ஹிஸ்புல்லா மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை எதிர்கொள்ளும்போது, சிறந்த தடுப்பு நடவடிக்கையைத் தீர்மானிப்பது என்பது சற்று கடினம் என்று கூறியுள்ளார்.


