Shri Korakka Siddhar: பல அற்புதங்களை நிகழ்த்திய கோரக்கர் சித்தர்!

Advertisements

கோரக்கர் என்பார் தமிழக சித்தர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 18 சித்தர்களில் ஒருவர். இவர் சித்தர்களான அகத்தியர் மற்றும் போகர் ஆகியோரின் மாணவராக இருந்தார்…

போகரின் பல்வேறு படைப்புகளில் கோரக்கர் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது ஜீவ சமாதி தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தின் வடக்கு பொய்கை நல்லூரில் உள்ளது. இவர் தமது இளம் வயதினை கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் கழித்தார். இவரது பிறப்பிடம் எனினும் வடநாட்டில் திருத்தலமான புருடன்குடி எனப்படும் இன்று பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரத்தில் அமைந்து உள்ளது.

கோரக்கரின் தொடர்புடைய பிற மடங்களாகப் பேரூர், திருச்செந்தூர் மற்றும் இலங்கையில் உள்ள திருக்கோணமலை உள்ளது. கோரக்கர் குகைகள் சதுரகிரி மற்றும் கொல்லி மலைகளில் காணப்படுகின்றன. மற்ற சித்தர்களைப் போலவே, கோரக்கர் மருத்துவம், தத்துவம் மற்றும் ரசவாதம் குறித்த பாடல்களையும் எழுதியுள்ளார்.

இவரது படைப்புகளாகக் கோரக்கர் மலாய் வாகதம் (கோரக்கரின் மலை மருந்துகள்), மலாய் வகாடம், கோரக்கர் வைப்பு, காலமேகம், மராலி வரதம், நிலாயோடுகம், சந்திரா ரெகாய் நூல் மற்றும் பல உள்ளன.

கோரக்கர் எதிர்கால நிகழ்வுகளை முன்னறிவித்து சந்திரரேகை நூலில் எழுதியுள்ளார். இவர் கணித்த அத்தகைய ஒரு நிகழ்வு என்னவென்றால், மக்கள் கடவுள்மீதான நம்பிக்கையை இழக்கும்போது போகர் மீண்டும் உலகில் பிறப்பார். இவர் நீண்ட காலம் தங்கியிருந்த கோரக்கரின் குகை தமிழ்நாட்டின் சதுரகிரி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.

கோரக்கர் சித்தரின் வாழ்கை வரலாறு:

அடுப்புச் சாம்பலிலிருந்து வெளிப்பட்டு, பல அற்புதங்களை நிகழ்த்தியவர் கோரக்கர் சித்தர். கோரக்கர் கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்று போகர் கூறுகிறார். இவர் வட இந்தியாவை சேர்ந்த கோரக்கர் (மராட்டியர்) ஆயினும் தமிழ்நாட்டில் உள்ள சதுரகிரியை நோக்கிப் பயணம் செய்து போகரை தோழராகக் கொண்டார். சட்டைமுனி, கொங்கணர் இவருக்கு நெருக்கமானவர்கள்.

ஒரு சமயம் சிவபெருமான் கடற்கரையில் உமாதேவிக்கு தாரக மந்திரத்தை உபதேசித்தபொழுது தேவி சற்று கண்ணயர்ந்தாள். சிவபெருமான் உரைத்துக் கொண்டிருந்த தாரக மந்திரத்தை மீன் குஞ்சு ஒன்று கேட்டு மனித வடிவமாகியது. சிவபெருமான் அதற்கு மச்சேந்திரன் என்று பெயரிட்டு சிறந்த சித்தராக்கி ஞானத்தைப் பரப்புமாறு அருள்புரிந்தார்.

மச்சேந்திரன் தவம் புரிந்து சிறந்த சித்தரானார். இவர் ஒரு ஊரில் சென்றுகொண்டிருந்தபொழுது இவருக்குப் பிச்சையிட்ட பெண் மனக்குறையோடு பிச்சையிட, மச்சேந்திரர் அப்பெண்ணிடம் உனக்கு ஏற்பட்ட துன்பம் யாது என வினவினார். அப்பெண் தான் மகப்பேறின்றி வருந்துவதை கூறினாள்.மச்சேந்திரர் சிறிது திருநீற்றை கொடுத்து “இதனை நீ உட்கொள்வாயானால் மகட்பேற்றை அடைவாய்” என்று கூறிவிட்டுச் சென்றார். தான் திருநீறு பெற்ற செய்தியை அவள் அண்டைவீட்டுப் பெண்ணிடம் கூறினாள்.

அவளோ “உனக்கு விபூதி கொடுத்தவர் போலித் துறவியாய் இருந்தாலும் இருக்கலாம். எனவே நீ அவ்விபூதியை உட்கொள்ளாதே” என்று சொன்னாள். இதனால் அச்சமடைந்த அப்பெண், தான் பெற்ற திருநீற்றை அடுப்பில் கொட்டினாள்.சில ஆண்டுகள் சென்றபின் மச்சேந்திரர் மீண்டும் அவ்வூருக்கு வந்தார். தான் முன்பொரு சமயம் பிள்ளைப் பேற்றிற்காகத் திருநீறு அளித்த பெண் வீட்டிற்கு சென்று “அம்மணி, உன்னுடைய மகனை நான் பார்க்க வேண்டும். அவனை அழைப்பாயாக”, என்று கூறினார்.

பக்கத்துவீட்டு பெண் பேச்சைக் கேட்டு அன்புடன் அளித்த விபூதியை உண்ணாமல் அடுப்பில் போட்டுவிட்டு, இப்பொழுது மகன் இல்லாமல் வருந்தும் நிலையைக் கூறி தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள் அப்பெண்.
மச்சேந்திரர், ‘’சரி அந்த விபூதியை எங்குக் கொட்டினாய்,’’ என்று கேட்டார். அவளும் அந்த விபூதி இருந்த அடுப்பின் சாம்பலைக் காட்டினாள். மச்சேந்திரர் அடுப்பின் பக்கத்தில் நின்று “கோரக்கா” என்று கூப்பிட்டார்.

அடுப்புச் சாம்பலிலிருந்து குழந்தை ஒன்று சித்தர் திருநீறு கொடுத்த காலம் முதல் இருக்கவேண்டிய வளர்ச்சியோடு வெளிப்பட்டது. அந்தக் கோதார அடுப்பின் சாம்பலிலிருந்து வெளிப்பட்டதால், கோரக்கர் என்று பெயரிட்டு சீடனாக ஏற்றுக் கொண்டார். ஒருநாள் கோரக்கர் ஒரு வீட்டிற்குச் சென்று பிச்சை கேட்டார். அந்த வீட்டுப் பெண்மணி ஒரு வடையை கொடுத்தாள். அந்த வடையை கோரக்கர் மச்சேந்திரருக்கு கொடுத்தார்.

வடையைத் தின்ற மச்சேந்திரர் மறுநாளும் அதே போன்ற வடை வேண்டும் என்று கேட்டார். கோரக்கரும் மறுநாள் வடை தந்த வீட்டிற்கே பிச்சை கேட்டுச் சென்றார். ஆனால் அப்பெண்ணோ வடை இல்லை என்று சொல்லிச் சாதம் போட்டாள். ஆனால் கோரக்கரோ தன் குருவிற்கு வடைதான் வேண்டும் என்று கேட்டார். அந்தப் பெண்ணிற்கு கோபம் வந்தது. எது இருக்கிறதோ அதைத் தானே போட முடியும், என்றாள்.

‘’உன் குரு வடை கேட்டதால் போயிற்று; இதுவே உன்னுடைய கண்ணை வேண்டுமென்று கேட்டால் தருவாயா,’’ என்றாள். இதனைக் கேட்ட கோரக்கர் ‘’என்னுடைய குருநாதர் என் கண்ணைக் கேட்டாலும் தருவேன். அந்தக் கண்ணை நீயே பெற்றுக் கொண்டு வடையைக் கொடு,’’ என்று கூறி தன்னுடைய கண்ணைப் பெயர்த்து அப்பெண்ணிடம் கொடுத்தார்.

இதைக் கண்ட அப்பெண் அச்சம் கொண்டு உடனே இனிமையான வடைகளை நெய்யில் சுட்டுக் கொடுத்தாள். வடையை கோரக்கர் தம்முடைய குருவிற்களித்தார். வடைகளைச் சுவைத்த மச்சேந்திரர், கோரக்கரை பார்த்து உன்னுடைய கண் எங்கே என்று கேட்கக் கோரக்கர் நிகழ்ந்ததைக் கூறினார்.

கோரக்கர் தன் மேல் வைத்த அன்பை உணர்ந்த மச்சேந்திரர் இழந்த கண்ணைத் திரும்பப் பெறுமாறு செய்தார். ஒரு சமயம் மச்சேந்திரர் மலையாள நாட்டிற்குச் சென்றார். அந்நாட்டு அரசிக்கு, மீனநாதன் என்ற குழந்தை பிறந்தது. இதனையறிந்த கோரக்கர் குருவை எப்படியும் அழைத்துக் கொண்டு வர வேண்டுமென்று மலையாள நாட்டை அடைந்தார்.மச்சேந்திரரை பார்த்து ‘’குருவே புறப்படுங்கள்; நாம் நமது இருப்பிடத்திற்குச் செல்வோம்,’’ என்று அழைத்தார்.

இவர்களுக்கு வழிச்செலவிற்கு வேண்டும் என்று அரசி பிரேமலா ஒரு தங்கக் கட்டியைப் பையிலிட்டு, கோரக்கர் அறியாமல் மச்சேந்திரரிடம் கொடுத்தார். இருவரும் செல்லும் வழியில் ஆங்காங்கே எதிர்பட்டவர்களிடம் இங்கே கள்வர்கள் பயமுண்டோ என்று கேட்டுக்கொண்டே வந்தார் மச்சேந்திரர்.இதனைக் கவனித்த கோரக்கர், மச்சேந்திரருக்குத் தெரியாமல் அவருடைய பையிலிருந்த தங்கக்கட்டியை எடுத்து வெளியே எரிந்துவிட்டு, அதற்குப் பதிலாக ஒரு கல்லை வைத்தார்.

மச்சேந்திரர் தங்கக்கட்டி உள்ளதா என்று பையைத் திறந்து பார்த்தபொழுது தங்கத்திற்கு பதிலாகக் கற்கள் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். கோரக்கர் மீது கோபம் கொண்டார்.“அடப்பாவி! நீ என்னுடைய பொருளைக் கைப்பற்றிக் கொண்டாயே. நீ எனக்குச் சீடனில்லை. இனி நீ என்னுடன் சேராதே” என்று கூறினார். குருவை நல்வழிப் படுத்த நினைத்த கோரக்கர் ஒரு மலைமீது ஏறிச் சிறுநீர் கழித்தார்.உடனே அந்த மலை முழுவதும் தங்கமலை ஆனது. கோரக்கர் குருவைப் பார்த்துத் தங்களுடைய பொருளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

அறியாமையையால் உழன்ற மச்சேந்திரரை பிடித்திருந்த மாயை விலகியது. மனம் தெளிவு பெற்ற குரு, சீடரை வெகுவாகப் பாராட்டினார். ஆயினும் குருவைப் பிரிந்து கோரக்கர் தனியே சென்று தவம் புரிந்து அஷ்டமா சித்திகளையும், காய சித்திகளையும் பெற்றார்.பின்னர், திருக்கையிலாயத்தை அடைந்து அங்கு அல்லமாதேவர் என்பவரைச் சந்தித்தார். கோரக்கர் அல்லமா தேவரிடம், நீங்கள் யார், என்று கேட்டார்.

அதற்கு அவர், இறந்து போகும் உடலில் பற்றுக்கொண்டுள்ளவரை மதித்துச் சொல்லத்தக்கது ஒன்றுமில்லை, என்றார்.கோரக்கர் குருவின் அருளால் காய சித்தி பெற்று எக்காலத்திலும் அழியாத உடலைப் பெற்றவன் நான் என்றார். ஆனால் அல்லமரோ காய சித்தி பெற்றுள்ளதால் வாழும் நாள் அதிகமாகுமே அன்றி அது நிலைத்திருக்காது. ஆகவே அழியும் இந்த உடலை அழியா உடலாகக் கூறுவது வீண் என்றார்.

‘’வீண் தர்க்கம் வேண்டாம் இதோ நிரூபித்துக் காட்டுகிறேன்,’’ என்று கூறி அல்லம தேவரிடம் கூர்மையான வாளினைக் கொடுத்து உன் தோள்வலிமையால் என்னை வெட்டு என்றார். அல்லமர் கோரக்கரை வெட்டினார். உடலின் மீது பட்ட வாள் ‘கிண்’ என்ற ஒலியுடன் தெரித்து அகன்றதே அன்றி அவர் உடம்பில் எந்த வித ஊறுபாடும் உண்டாக்கவில்லை. செருக்குடன் அல்லமரை கோரக்கர் நோக்கினார்.

அல்லமர் கோரக்கரை நோக்கி “சரி, உன் திறமையை நிரூபித்து விட்டாய். இதோ இவ்வாளினால் உன் வலிமையுடன் நீ என்னை வெட்டு” என்று கூறினார்.கோரக்கரும் அல்லமரை வாள் கொண்டு வெட்டினார். அவ்வாள் அல்லமரின் உடலில் புகுந்து வெளிப்பட்டது. மறுபடியும் வெட்டினார். காற்றை வெட்டுவது போன்று உடலினுள் புகுந்து வெளிவந்தது. தன்னைவிட மிக்க சக்தி பெற்ற அல்லமரை வணங்கித் தன் பிழையைப் பொறுக்க வேண்டினார் கோரக்கர். இனியாகிலும் உடம்பில் உள்ள பற்றினை நீக்கி உனது உண்மை நிலையை அறிவாயாக என்று கூறினார் அல்லமர்.

இதனைக் கேட்ட கோரக்கர் தன் உடலையே ஆன்மாவின் வடிவம் என்று எண்ணியிருந்ததை விடுத்து உண்மை நிலையை உணர்ந்தார். கோரக்கர் செய்த நூல் “கோரக்கர் வைப்பு” என்று மீன் குஞ்சு வடிவத்தில் மச்சேந்திரர் கேட்ட தாரக மந்திரமே ஞானசர நூல் என்றும் கூறுவர்.இதில் சரம்பார்க்க ஆசன விதி, சரம்பார்க்கும் மார்க்கம், போசன விதி, கருப்பக் குறியின் முறை, நாடிகளின் முறைமை முதலியவைகள் கூறப்பட்டுள்ளன.

கோரக்கர் வரதமேடு என்னும் காட்டினுள் தவம் செய்யச் சென்றபோது பிரம்ம முனியை சந்தித்து நண்பர்களாயினர். இருவரும் செய்த வலிய தவத்தினால் அரும்பெரும் சித்துகளை அடைந்தனர். மேலும் ஐந்தொழிஐயும் இயக்கும் ஆற்றல் பெற வேண்டி இருவரும் யாகம் செய்யத் துவங்கினர். யாகத்தீயிலிருந்து இரண்டு அழகான பெண்கள் எழுந்து வந்தார்கள். அதே சமயம் அங்கு வந்த அக்கினியும், வாயுவும் அவ்விரு பெண்களையும் கண்டு மோகித்து நின்றார்கள்.

யாகத்தைத் தடை செய்ய வந்த பெண்கள்மீது கோபம் கொண்டு கமண்டலத்திலிருந்த நீரை எடுத்து இரு பெண்களின் மீதும் தெளிக்க ஒரு பெண் புகையிலைச் செடியாகவும், இன்னொரு பெண் கஞ்சா செடியாகவும் மாறினார்கள்.‘கோரக்கர் மூலிகை’ (கஞ்சா), ‘பிரம்மபத்திரம்’ (புகையிலை) பெண்கள்மீது மோகித்த அக்கினியும், வாயுவும் நெருப்பும், நீருமாக மாறி அச்செடிகளுடன் சேர்ந்தார்கள். அப்பொழுது சிவபெருமான் முனிவர்கள் முன் தோன்றி, “இறந்து போனவர்களைப் பிழைக்க வைக்கும் சக்தி உங்களுக்குக் கிடைக்கும். உங்களினால் உண்டான இரு செடிகளும் கற்ப மூலிகைகளாகத் திகழுமென வரம் தந்து மறைந்தார்.

கோரக்கர் தாம் அறிந்த ஞானமெல்லாம் எல்லோரும் அறிய வெளிப்படையாகப் பாடினார். அந்த நூல்கள் தீயவர்களிடம் கிடைத்துவிடக் கூடாது என்று எண்ணிய சித்தர்கள் கோரக்கர் எழுதிய நூல்களை எடுக்க அவருடைய ஆசிரமத்திற்கு வந்தார்கள்.

இதனையறிந்த கோரக்கர், அரிசியுடன் கஞ்சாவைச் சேர்த்து அடை செய்து சித்தர்களின் கண்ணில் படும்படியாக வைத்தார். நூல்களை எடுக்க வந்த சித்தர்கள் அடையைப் பார்த்ததும் அதனை எடுத்து உண்டு மயங்கினர். அதுசமயம் முக்கியமான நூல்களை எடுத்து மறைத்து வைத்தார். சித்தர்கள் எழுந்தபோது அங்கிருந்த சில நூல்களை மட்டுமே எடுத்துச் சென்றார்கள். இவர் கோயம்புத்தூர் அருகில் உள்ள பேரூரில் சித்தியடைந்ததாகக் கூறப்படுகிறது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *