
ஈரோடு அக்ரஹார வீதியைச் சேர்ந்தவர் செந்தில் முருகன். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால் சின்னம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையால் அவர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.
அடுத்து சில நாட்களில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து அதிமுகவில் இருந்த செந்தில் முருகன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக தலைமை புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில் இடைத்தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார். அவரது வேட்பு மனுவும் ஏற்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவரைக் கட்சியிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி நேற்றுமுன்தினம் அறிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து, நேற்று தனது வேட்புமனுவை செந்தில் முருகன் வாபஸ் பெற்றார்.
இந்த நிலையில், செந்தில் முருகன் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.
அமைச்சர் முத்துசாமி தலைமையிலான தி.மு.க.வினர் வேட்பாளர் சந்திரகுமாருக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது, செந்தில் முருகன் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்து வி.சி.சந்திரகுமாருக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.


