
தனது தந்தை கலைஞரின் பெயரை வைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் எம்.பி. கனிமொழிக்கு பிரதமர் மோடியை விமர்சிக்க எந்தத் தகுதியும் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ஒவ்வொரு நாளும் மகளிருக்கு முக்கியமான நாள் தான். மேற்கத்திய கலாசாரம் மூலம் மகளிர் தினம் கொண்டு வரப்பட்டது. இந்த நாள் அனைத்து மகளிருக்கும் நல்ல நாட்களாக அமைய மகளிர் தின நல்வாழ்த்துக்கள். என்னைப் பொறுத்தவரையில் பெண்களுக்கு எல்லா நாட்களுமே முக்கியமான மகளிர் தின நாட்கள் தான்.
வாடகை வீடு எடுத்துப் பிரதமர் தமிழ்நாட்டில் தங்கினாலும் தமிழக மக்கள் அவருக்கு வாக்களிக்கமாட்டார்கள், எனக் கனிமொழி கூறியதாகக் கேட்ட கேள்விக்கு, கனிமொழிக்கு அப்பா கட்டி வைத்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காடு, மேடு சென்று வேலை பார்த்ததில்லை, அப்பா கட்டி கொடுத்த வீட்டில் ஓசியில் வாழும் கனிமொழி அவர்களுக்குப் பிரதமர்பற்றிப் பேசுவதற்கு அருகதை இல்லை. அனைவரும் உழைத்துச் சம்பளம் வாங்குகிறார்கள். கனிமொழி என்ன உழைக்கிறார்? அப்பாவின் பெயரை வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கருணாநிதி என்ற பெயரை எடுத்து விட்டால் கனிமொழி யார்?
பிரதமர் சென்னை வந்து வாடகை வீடு எடுத்துத் தங்க வேண்டும் எனப் பேசுவதற்கு முன் கனிமொழி கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்க வேண்டும். எத்தனை முறை ஜெயிலுக்கு சென்று உள்ளார்கள், எத்தனை ஊழல் வழக்குகள் உள்ளன. எப்பொழுது, சீனாவின் கொடியை விளம்பரத்தில் போட்டார்களோ அப்பொழுது அவர்கள் 200 ரூபாய் உடன் பிறப்பாக மாறிவிட்டார்கள். யாரைப் பற்றி எப்படி பேச வேண்டும் என்பதை சிந்தித்துப் பேச வேண்டும். பிரதமரைப் பற்றிப் பேசுவதற்கு ஒரு சதவீதம் கூடத் தகுதி இல்லையெனக் கூறினார்.
மேலும் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தேடப்படும் ஜாபர் சாதிக் திமுகவின் அயலக அணியில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார். ஜாபர் சாதிக் குறித்து திமுக விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாகத் தமிழக காவல்துறை தலைவரை முன்னிரை படுத்தி அவரை விளக்கம் அளிக்க வைக்கின்றனர் என்றார்.



