
2026 தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்துள்ள சூழலில், மத்திய புலனாய்வு அமைப்புகளின் பார்வை மீண்டும் தமிழக கோட்டை பக்கம் திரும்பியுள்ளது. கடந்த ஆட்சியில் முடக்கி வைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு எதிரான விசாரணை கோப்பிற்கு உயிர் கொடுத்து, 3 பக்க அதிரடி கடிதத்தை தட்டியெழுப்பியுள்ளது அமலாக்கத்துறை. ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலாளர் அலுவலகம் என சுழன்றடித்த இந்த ஃபைல், இப்போது முதலமைச்சரின் முடிவிற்காகக் காத்திருக்கிறது. இந்நிலையில் , விஜய்யின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்தான செய்தியை தற்பொழுது விரிவாக பார்க்கலாம்…
மே 15, 2026 அன்று, அமலாக்கத்துறை தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் 3 பக்கங்கள் கொண்ட புதிய கடிதம் ஒன்றை முதல்வர் விஜய்க்கு அனுப்பியுள்ளார்.. அதில், வேலைக்கு பணம் பெற்ற மோசடி வழக்கில் செந்தில் பாலாஜியைத் தொடர, மாநில அரசின் முறையான அனுமதியைக் கோரியுள்ளது.. இதற்கிடையே, புதிய அரசு பொறுப்பேற்றவுடன் இந்த முக்கியக் கோப்பு முதலமைச்சர் விஜய்யின் மேசைக்கு வந்துள்ளதாகவும், இது குறித்து அவர் உயர் அதிகாரிகளுடன் ரகசிய ஆலோசனை அல்லது ஆய்வுக் கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கோட்டை வட்டாரத்தில் செய்திகள் கசிந்துள்ளன.
ஒரு முதலமைச்சர் தனது நிர்வாக அதிகார வரம்பிற்குள் எந்தவொரு கோப்பு குறித்தும், எந்தவொரு துறை அதிகாரிகளுடனும் ஆய்வுக் கூட்டம் நடத்த முழு சட்டப்பூர்வ உரிமை உண்டு. எனவே, செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் கடிதம் குறித்து முதலமைச்சர் விஜய், தலைமைச் செயலாளர் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்கு எந்தவித தடையும் இல்லை; அது முழுமையாக அனுமதிக்கப்படும். ஆனால், இந்த விவகாரத்தில் எழும் உண்மையான கேள்வி கூட்டம் நடத்தப்படுமா? என்பதல்ல, அந்தக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படும், அதற்கு சட்ட வடிவம் தரப்படுமா? என்பதுதான்.
அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே, தவெக கட்சியின் மாநாடுகள் மற்றும் தேர்தல் பிரச்சாரங்களின் போது, திமுக அரசின் மீதும், குறிப்பாக செந்தில் பாலாஜி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர் விஜய். “ஊழல் கறைபடிந்தவர்கள்”, “டாஸ்மாக் முறைகேடுகள்” எனப் பெயர் குறிப்பிடாமலும், நேரடியாகவும் பலமுறை செந்தில் பாலாஜியின் அரசியல் பாணியை விஜய் கடுமையாக எதிர்த்துள்ளார். பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று செந்தில் பாலாஜியை விமர்சனம் செய்து விஜய் பாடியதும் குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட சூழலில், தான் தொடர்ச்சியாக எதிர்த்த ஒரு நபரின் மீதான விசாரணைக்கு, தன் கைகளாலேயே அனுமதி கொடுக்கும் அதிகாரம் இப்போது விஜய்க்கு வந்துள்ளது.
இந்நிலையில் , செந்தில் பாலாஜி அண்மையில் அளித்த பேட்டியில், “புதிய தவெக அரசின் செயல்பாடுகளைப் பொறுத்திருந்து பார்ப்போம்; இது ரீல் ஆட்சியா, ரியல் ஆட்சியா என்று தெரியும்” எனப் பேசியிருந்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த அமலாக்கத்துறை கடிதத்தின் மீது எடுக்கப்படும் முடிவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் விஜய் அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி, இந்த வழக்கில் உள்ள முகாந்திரங்களை ஆராய்ந்து, நீதிமன்ற விசாரணைக்கு பச்சைக் கொடி காட்டுவாரா? அல்லது சட்டத்துறை ஆலோசனையின் பேரில் அடுத்தகட்ட நகர்வை அறிவிப்பாரா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.. மேலும் , புதிய தவெக அரசு தனது நிர்வாகத் திறனையும், ஊழலுக்கு எதிரான தங்களின் கொள்கை நிலைப்பாட்டையும் நிரூபிக்க வேண்டிய மிக முக்கியமான கட்டம் இது. சட்ட விதிகளின்படி முதலமைச்சர் விஜய் எடுக்கப்போகும் அந்த இறுதி முடிவு, தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




