
திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என திவ்யா சொன்ன கருத்தை தந்தை சத்யராஜும் ஆமோதித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் திருமணம் என்பது கட்டாயமில்லை என்று சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
திமுகவில் களப்பணியாற்றி வரும் ஊட்டச்சத்து நிபுணரும், சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ், ஒரு டிவி சேனலுக்கு பேட்டியளித்த போது கூறியிருப்பதாவது: ஒரு ஆணும் பெண்ணும் கல்யாணம் பண்ணிட்டோமேன்னு ஒன்னா இருக்கக் கூடாது. அவங்களுக்குள்ள காதல் இருக்கணும். எனக்கு ஜாதகம் பார்த்து ஒரே மதத்துல நடக்குற கல்யாணத்து மேல எல்லாம் ரொம்ப நம்பிக்கை இல்லை.
ஒருத்தருக்கு ஒருத்தர் புடிச்சி இருந்தா யார் கூட வேணா போய் வாழலாம். சேர்ந்து கூட வாழனும்னு இல்ல, அவங்க அவங்க வீட்ல வாழலாம். கல்யாணம் பண்ணாம குழந்தை பெத்துக்குறது கூட எனக்கு சம்மதம்தான் என தெரிவித்திருந்தார். இவரது இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதிலும் கல்யாணம் செய்யாமல் குழந்தை பெற்றுக் கொள்வது, யாருடனும் வாழ்வது என்பது நம் கலாச்சாரத்திற்கு உகந்ததில்லை என்பதுதான் எதிர்ப்பாளர்களின் வாதமாக உள்ளது.
கல்யாணம் ஆகாமல் யார் வேணும்னாலும் யார் கூட வேண்டும் என்றாலும் வாழலாம் என்பதும் நமது கலாச்சாரத்திற்கு ஏற்றது இல்லை. இது குறித்து நிறைய பேர் திவ்யாவை விமர்சித்து வருகிறார்கள். பலர், “ஜாதி, மதம், திருமணம் உள்ளிட்டவைகளில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் அதை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். எதற்காக அப்பட்டமாக வெளிப்படுத்த வேண்டும். இதை பார்க்கும் இளம் தலைமுறையினர் என்ன நினைப்பார்கள்” என்ற கேள்வி எழுப்புகிறார்கள்..
இந்த வீடியோவுக்கு ஆதரவான கருத்துகளும் வருகின்றன. பலர் திவ்யா சொன்னது சரி என வாதிடுகிறார்கள். இந்த நிலையில் திவ்யாவின் தந்தை சத்யராஜ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: என் மகள் திவ்யா திருமணம், ஜாதி மதம், சடங்குகள் குறித்து ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டிக்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்திருந்தனர். என்னிடம் அதுகுறித்து கருத்து கேட்டார்கள். நான் ஒரு தீவிர பெரியாரியவாதி. எனக்கு ஜாதி, மதம், சடங்கு இதில் எல்லாம் உடன்பாடே இல்லை.
திருமணம் குறித்து என்னிடம் கருத்து கேட்டிருந்தார்கள். திருமணம் என்பது கட்டாயமில்லை. அது தனிநபர் விருப்பத்தை சார்ந்த விஷயம். திருமணம் செய்வது, விவாகரத்து பெறுவது, தனியா வாழ்வது என்றாலும் அது தனிப்பட்ட விருப்பம். திருமணம் இல்லாமலேயே நமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்றாலும் இன்று இருக்கும் மருத்துவ வளர்ச்சியில் அதற்கான வாய்ப்பும் இருக்கிறது. அது சரியாக அமையலாம், அமையாமலும் போகலாம். ஆனால் அதற்கான வாய்ப்புள்ளது. எனவே இதெல்லாம் தனிநபரின் விருப்பம் சார்ந்த விஷயம்தான் என்பது எனது கருத்து.
எனவே இந்த கருத்துகளில் திவ்யாவுடன் நான் உடன்படுகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோவால் மகிழ்ந்த திவ்யா, “எனது பேட்டி வைரலான நிலையில் அப்பாவின் கருத்து இதுதான். அப்பா என்னை நம்புகிறார். எனவே நான் சொன்ன கருத்துகள் சரியா, தவறா என வேறு யாரும் எனக்கு சர்டிபிகேட் கொடுக்கத் தேவையில்லை” என திவ்யா தெரிவித்திருந்தார்..




