
தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழுதடைந்த வீடுகளுக்குப் பதிலாக மாற்று கட்டிடங்கள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி அடுத்து உள்ள ராமபட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்மலையூர் கிராமத்தில் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துச்சாமி கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட வடுகபாளையம் பகுதியில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஏழை எளிய மக்கள் 350 பேருக்கு அரிசி பைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த வசதி துறை அமைச்சர் முத்துசாமி பேட்டியின்போது வீட்டு வசதி துறை சார்பில் கட்டிடங்கள் கட்டப்பட்டு சுயநிதி திட்டத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே கட்டப்பட்ட 3 ஆயிரம் வீடுகள் விற்கப்படாமல் இருந்தது.அதையெல்லாம் விற்பனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் வாடகைக்கு விடும் திட்டமும் நடைபெற்று வருகின்றனர். வீட்டு வசதி துறை சார்பில் கட்டப்பட்டு 40 ஆண்டுகள் பழமையான கட்டிடங்கள் பழுதடைந்து காணப்படுகிறது. பல இடங்களில் வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. சுயநிதியில் விற்கப்பட்டிருந்தாலும் வீட்டு வசதி துறைக்குச் சம்பந்தம் இல்லை என்றாலும் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க 10 இடங்களில் மாற்றுக் கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாகக் கோவை சிங்காநல்லூரில் 960 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.



