
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தார். வேட்புமனு தாக்கல் செய்தபோது, தனது சொத்து விவரங்களை பிரமாண பத்திரத்தில் விஜய் குறிப்பிட்டு இருந்தார். இதில், விஜய் தனது மனைவிக்கு 12 லட்சத்து 60 கோடி ரூபாய் கடன் கொடுத்ததாக வேட்புமனுவில் கூறியதை ஆய்வு செய்யக்கோரி, பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் வெங்கடேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வேட்புமனுவில் உண்மை விவரங்களை மறைப்பது தேர்தல் நடைமுறையில் மோசடி செய்வதைப் போன்றது என மனுதாரர் தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


