
சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்தும், தங்களைப் பணி நிரந்தரம் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் கூவம் ஆற்றில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் சில மண்டலங்களில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்குக் கொடுப்பதை எதிர்த்தும், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து 158 நாளாகப் போராடி வருகின்றனர். அவர்களை அடக்கி ஒடுக்கியும் கைது செய்யும் அரசு தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.இந்நிலையில் இன்று எழும்பூர் கோ ஆப் டெக்ஸ் அலுவலகத்திற்கு அருகே உள்ள கூவம் ஆற்றில் தூய்மைப் பணியாளர்கள் ஐம்பதுக்கு மேற்பட்டோர் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களைக் கைது செய்யக் காவல்துறையினர் முயன்று வருகின்றனர். தூய்மைப் பணியாளர்கள் கூவம் ஆற்றில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடத்துக்குச் செல்ல முயன்ற மற்ற பணியாளர்களை வழியிலேயே தடுத்து நிறுத்திக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.



