
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்கத் தகடுகளைக் களவாடிய வழக்கில் முதன்மையாகக் குற்றஞ்சாட்டப்பட்ட உன்னிக்கிருஷ்ணன் போற்றியைச் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கைது செய்துள்ளனர். அவரை 14 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவில் கருவறையில் தங்கத் தகடுகள் பதிப்பதற்காகத் தொழிலதிபர் விஜய் மல்லையா 1998ஆம் ஆண்டு 30 கிலோ தங்கமும், 1900 கிலோ செப்புத் தகடுகளும் வழங்கியிருந்தார்.
2019ஆம் ஆண்டு கோவில் சீரமைப்புப் பணியின்போது கருவறையிலும், துவாரபாலகர்கள் சிலை மீதும் வேய்ந்திருந்த 4 கிலோ தங்கத் தகடுகள் களவாடப்பட்டு விட்டன.
இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளான காங்கிரசும் பாஜகவும் கோரி வந்தன. இந்நிலையில் இது குறித்து விசாரிக்க ஏடிஜிபி தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவைக் கேரள உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது.
இந்தக் குழுவினர் இந்த வழக்கில் முதன்மையாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கோவில் பூசாரி உன்னிக்கிருஷ்ணன் போற்றியை இரவு இரண்டரை மணிக்குக் கைது செய்தனர்.
அதன்பிறகு திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்குக் கொண்டு சென்றனர். அதன்பின் பத்தனம்திட்டை மாவட்டம் ரன்னியில் உள்ள நீதிமன்றத்தில் உன்னிக்கிருஷ்ணனை நிறுத்தினர். 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவரைச் சிறையில் அடைத்தனர்.




