
தமிழக சட்டமன்றத் தேர்தல் 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆரம்பம் முதலே தமிழக வெற்றி கழகம் பல இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக, திராவிடக் கட்சிகளின் கோட்டைகளாகக் கருதப்பட்ட தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் மிரட்டலான வெற்றியைப் பதிவு செய்து வருகின்றனர்.
வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் தனக்குச் சாதகமாகத் தெரிந்தவுடன், பனையூர் அலுவலகத்தில் இருந்த விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திற்குப் புறப்பட்டார். அங்கு தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா சந்திரசேகர் ஆகியோரைச் சந்தித்து ஆசி பெற அவர் திட்டமிட்டுள்ளார்.
ஏற்கனவே செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஏ. சந்திரசேகர், “எந்தக் கூட்டணியும் இல்லாமல் தனித்து நின்று என் மகன் இமாலய வெற்றி பெற்றிருப்பது வரலாற்றுச் சாதனை. அவனது தன்னம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றி இது” என்று கண் கலங்கியபடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
தாயார் ஷோபாவும் தனது மகனின் அரசியல் வெற்றியை இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகிறார். விஜய் தனது பெற்றோரைச் சந்திக்க வருவதை அறிந்த தொண்டர்கள், நீலாங்கரை இல்லத்தின் முன்பு குவியத் தொடங்கியுள்ளனர். “அடுத்த முதல்வர் விஜய்” என்ற கோஷங்களுடன் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் அவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வந்த தந்தை – மகன் இடையேயான கருத்து வேறுபாடுகள் மறைந்து, இந்த அரசியல் வெற்றி இருவரையும் மீண்டும் ஒரு நெகிழ்ச்சியான புள்ளியில் இணைத்துள்ளதாகத் தொண்டர்கள் நெகிழ்ந்து போயுள்ளனர்.


