
தூத்துக்குடியில் விரைவில் 100 சதவீத பேருந்து போக்குவரத்து தொடங்கும் என போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். நெல்லை மாவட்டத்தில் 95 சதவீத பேருந்து போக்குவரத்து இயக்கப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக சாலைகளின் பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டதால் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 14-ந்தேதியில் இருந்து அந்த பகுதிகளில் மிதமான மழையாக ஆரம்பித்து, 2 தினங்கள் கனமழை வெளுத்து வாங்கியது.
தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்து பணிமனைகளையும், நீரில் மூழ்கிய பேருந்துகளையும் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் நெல்லை மாவட்டத்தில் 95 சதவீத பேருந்து போக்குவரத்து இயக்கப்படுவதாகவும், தூத்துக்குடியில் 45 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், வெள்ளநீர் வடிந்ததும் விரைவில் 100 சதவீத பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். அதேபோல் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் போக்குவரத்து சேவை முழுமையாக இயக்கப்படுகிறது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.


