
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உயிரிழந்த நிலையில் அவரது உடல் இன்னும் சற்று நேரத்தில் வளசரவாக்கம் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. இதையொட்டி வீட்டிலிருந்து ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் புறப்பட்டு, சற்று நேரத்தில் பிருந்தாவன் காலனியில் இருக்கும் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
GEM மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின்படி, ரோபோ சங்கர் செப்டம்பர் 16, 2025 அன்று, “கடுமையான இரைப்பை குடல் இரத்தப்போக்கு மற்றும் சிக்கலான வயிற்றுப் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட பல உறுப்பு செயலிழப்பு” காரணமாக ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவரது உடல்நிலை மோசமடைந்து செப்டம்பர் 18 அன்று இரவு 9:05 மணிக்கு காலமானார்.ரோபோ சங்கரின் மறைவுக்கு பலரும் அவர்களுடைய இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.அவருடைய கடின உழைப்பால் சின்னத்திரையிலிருந்து , வெள்ளிதிரைக்கு உயர்ந்து தனக்கென தனி அடையாளத்தை பதித்தவர் தான் இவர்.
மேலும் இவர் பல படங்களில் நகைசுவை நடிகராக நடித்திருக்கிறார். அந்த வகையில் , தனுஷுடன் நடித்த ‘மாரி’, விஷாலுடன் நடித்த ‘இரும்புத்திரை’, விஷ்ணு விஷாலுடன் நடித்த ‘வெள்ளைனு வந்துட்டா வெள்ளைக்காரன்’ போன்ற படங்களில் தனது தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் பிரபலமானார். ‘கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ்’, ‘கன்னித் தீவு’, ‘செம்பருத்தி’, ‘டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2’ போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் பிரபலமானவர். அவரது திடீர் மறைவு தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


