
புதுச்சேரி:
அரசு அதிகாரிகளுக்கான பயிற்சி ஒப்பந்த நிகழ்வில் முதலமைச்சர் ரங்கசாமி பேசியது,
நிர்வாகம் விரைவாக இருக்க பிரதமர் மோடி எடுத்த முயற்சியால் தற்போது வளர்ச்சி கிடைத்துள்ளது. அதைதான் நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம். நாட்டின் வளர்ச்சிபோல் புதுச்சேரி வளர்ச்சி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
ஒரிடத்தில் முடியும் என்று சொல்லி மறு இடத்தில் வேறு கேள்வியை அரசுச் செயலர்கள் எழுப்பினால் எப்படி விரைவாகச் செய்ய முடியும்? ஒரு பள்ளியை 15 ஆண்டுகளாகியும் கட்ட முடியவில்லை. எப்படி முன்னேற்றம் கிடைக்கும்? கோப்புகள் திரும்பினால் முதலமைச்சர் நிலை எப்படி இருக்கும் என நினைத்துப் பார்க்க வேண்டும்.
மக்களுக்காக என்றால் எந்தச் செயலையும் செய்து முடிக்க வேண்டும். ஆனால் நிர்வாகம் அதுபோல் இல்லை. முதலமைச்சராகி 3½ ஆண்டுகளாகி விட்டது. சுற்றுலாவை மேம்படுத்த வளர்ச்சி திட்டத்தை 4 ஆண்டுகளாகியும் செய்ய முடியவில்லை.
நிர்வாக நிலையில் வெவ்வேறு எண்ணத்தில் கோப்புகள் செல்கிறது. ஒரு திட்டத்தைக் கொண்டு வர ஓராண்டு ஆகலாம் ஆனால் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எதற்கு இத்தனை ஆண்டுகள்? எந்தச் சங்கடமும் இல்லாமல் திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.
அரசு பணிகளில் 10 ஆயிரம் பேருக்கு வேலை தர முடிவு எடுத்தோம். காலிபணியிடங்களை நிரப்பினால் அரசுப் பணிகள் விரைவாக நடக்கும். அரசு முடிவு எடுத்து நிலையில் விரைவாகப் பணியிடங்களை நிரப்புவதில் என்ன சிரமம் எனத் தெரியவில்லை.
பொதுப்பணித்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப முடிகிறது. ஆனால், மின்துறையில் முடிய வில்லை. அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து விரைவாக நிரப்ப வேண்டும். செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். காலம் கடத்துவதுபோல் இருக்க கூடாது. காலம் கடத்தாமல் மக்களுக்குச் சேவையாற்றினால்தான் வளர்ச்சியைக் கொண்டு வர முடியும்.

